அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தமிழக அரசு பள்ளிகளில் உடற்கல்வி, தையல் இசை, ஓவியம் போன்றவற்றைக் கற்பிக்க 16,548 பகுதி நேர சிறப்பாசிரியர்களை நியமிக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த சிறப்பாசிரியர்கள் பல்வேறு தகுதிகளை அடிப்படையாக வைத்து தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
மேலும், தேர்வு செய்யப்படும் ஆசிரியர் பட்டியல் விவரங்களை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக தகவல் பலகையிலும், அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் www.pallikalvi.in பள்ளிக்கல்வி இணையதளத்திலும் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இணையதளத்தில், ஆசிரியர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின் தகுதி, அவர்கள் எடுத்த மதிப்பெண், இடஒதுக்கீடு ஆகிய விவரங்கள் அனைத்தும் இடம்பெறும்.
அதில்லாமல், மொத்தப் பணியிடங்களில் ஆசிரியர்களை தேர்வு செய்வதோடு மட்டுமல்லாமல், மேலும் 10 சதவீத இடங்களை கூடுதலாக தேர்வு செய்து காத்திருப்போர் படடியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், தேர்வு செய்யப்பட்டவர்களில் எவரேனும் பணியில் சேராமல் இருந்தாலோ, வருங்காலத்தில் இடையில் நின்றாலோ காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு வாய்ப்பளிக்கலாம்.
பகுதி நேர ஆசிரியர்கள் ஞாயிறு தவிர்த்து வாரத்தில் ஏதாவது 3 நாட்கள் காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை அல்லது பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை என ஏதேனும் ஒரு நேரத்தில் பணியாற்ற வேண்டும். சிறப்பாசிரியர்களின் பணி நேர அட்டவணையை, பள்ளியின் தலைமை ஆசிரியர் தயாரித்து ஆசிரியருக்கு அளிப்பர். ஒரு நாளைக்கு 3 மணி நேரம் வீதம் வாரத்தில் 9 மணி நேரம் பணியாற்றும் சிறப்பாசிரியருக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும்.