தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்க உள்ள இந்நிலையில், கல்வித்துறை மூன்றாவது முறையாக மாற்றியமைத்து வெளியிட்டுள்ள மாதிரி வினா-விடை புத்தகத்தில் சமூக அறிவியல் கேள்வித்தாள் பகுதியில் மாணவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சமூக அறிவியல் கேள்வித்தாளுடன் இந்திய அல்லது ஆசிய வரைபடம் வழங்கப்பட்டு, அதில் வினாத்தாளில் 15 இடங்கள் கொடுத்து 10 இடங்களை சரியாக குறித்தால் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மதிப்பெண் வீதம் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால், சமச்சீர் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்ட மாதிரி வினா-விடை புத்தகத்தில், கேள்வித்தாளில் குறிப்பிட்ட பகுதிகளை வரைபடத்தில் குறிப்பதோடு மட்டுமல்லாமல் அப்பகுதியைப் பற்றி ஓரிரு வரிகளில் விளக்கமளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்கள் ஓரிரு வரிகள் எழுதினால் பத்து மதிப்பெண் கிடைக்குமா அல்லது விரிவாக எழுதவில்லை என மதிப்பெண் குறைக்கப்படுமா என்று தெரியாமல் குழம்பியுள்ளனர். இது குறித்து கல்வித்துறையிடம் விளக்கமளிக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது.
இப்பாடத்தில் பத்து மதிப்பெண்களை சுலபமாக பெறும் பகுதியாக வரைபடப் பகுதி இருந்தது. ஆனால் இதிலும் இவ்வாறு சிக்கல் ஏற்பட்டுள்ளது என மாணவர்களுக்கு கவலை ஏற்பட்டுள்ளது.